சனி, 27 ஜூன், 2009

நாடோடிகள் - * நச் * என்று ஒரு திரைப்படம்




ச என்ற எழுத்தை ஷ வாகவும் உலகத்தரத்தில் ரத்தினமான படங்களைக் கொடுப்பது தாங்கள்தான் எனவும் மார் தட்டிக் கொள்ளும் இயக்குனர்கள், தயவு செய்து இந்த படத்தைப் பார்க்க வேண்டும். சூப்பர்ஸ்டார்களும், சூப்பர் ஆக்டர்களும், பல இளைய, புரட்சித் தளபதிகளும் எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என இந்த படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.


திரைப்படம் என்பது வாழ்வியலை ஒட்டி அமைய வேண்டும். பல புகழ் பெற்ற படங்களின் பின்னணி நம் வாழ்வில் நிச்சயம் நடந்திருக்கும். இந்த படத்தைப் பார்க்கும் போது, படம் என்பது நமக்குத் தோன்றவே தோன்றாது.


படத்தின் ஆரம்பத்திலேயே , என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன், என சொல்லி கைதட்டல் வாங்கி விடுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. நட்பும் , காதலும் இல்லாத வாழ்ககை ஒரு வாழ்க்கையே இல்லை. பாசம் கூட சிலருக்குக் கிடைக்காமல் போகலாம், ஆனால் இவையிரண்டும் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நட்பும், காதலுமே பிரிந்து கூடப் போயிருக்கும். ஆனால் அவற்றை நமக்கு பிடிக்காது என்று சொல்லிவிட முடியாது.


அப்படிப்பட்ட உன்னதமான உணர்வை மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். நண்பனின் நண்பனுக்கு வந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களைப் பற்றிய கதை. நண்பர்களாக சசிகுமார், பரணி, விஜய் மூவருமே அந்த கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே அவர்களில் ஒருவராக நாமும் ஆகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.


நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கப் போராடியவர்களின் கதைகளைத்தான் இத்தனை காலமாக பார்த்துக் கொண்டு வருகிறோம். முதல் முறையாக, திருமணத்திற்குப் பின் அந்த காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சசிக்கும் அவருடைய முறைப்பெண்ணான அனன்யாவுக்கும் இடையே இருக்கும் காதல், விஜய்க்கும் சசியின் தங்கையான அபிநயாவுக்கும் இடையே இருக்கும் காதல் என , சசி நண்பனின் கெட்ட காதலுக்கு இடையே, இவர்களின் நல்ல காதலும் படத்தில் உண்டு.

சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு தரமான படத்தில் தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சசி அவர்களே நல்ல சினிமா பக்கமே இருங்கள், தப்பித் தவறி மசாலா சினிமா பக்கம் சேர்ந்து விடாதீர்கள், என் தாழ்மையான வேண்டுகோள்.

புதுமுகங்கள் அனன்யா, அபிநயா இருவருமே அசத்திட்டாங்கய்யா. அபிநயா வாய்பேச முடியாத, காது கேளாதவர் . இவையிருந்தும் நடிக்கத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் இவரின் நடிப்பு அவர்களுக்கு பாடமாக அமையட்டும்.

இசை சுந்தர் சி பாபு. வாளமீனுக்கும், கத்தாழக் கண்ணால புகழுக்கும் சொந்தக்காரர். இந்த படத்தில் இசை ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார். ஆனால் விட்ட குறை தொட்ட குறை போலிருக்கிறது, யக்கா யக்கா என ஒரு பாடலை போட்டிருக்கிறார். ஆனால் ஜகடம் ஜகடம் பாடல் தியேட்டரையே உலுக்குகிறது.


கல்லூரி படத்தில் நடித்த பரணி, சென்னை-28 படத்தில் நடித்த விஜய், கஞ்சா கருப்பு இவர்களுக்கும் இந்த படம் பேரைக் கொடுக்கும். வழக்கமான தமிழ் சினிமா வில்லன்களாக ஜெயப்பிரகாஷ், மற்றொரு பெண்மணி (பேர் தெரியவில்லை) .


நமோ நாராயணன் என ஒரு அறிமுக நடிகர். டிஜிட்டல் பேனரை வைத்து இவர் அடிக்கும் லூட்டிக்கு தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி. இப்படி வருடத்திற்கு நான்கைந்து படங்கள் வந்தாலே போதும். மூடப்பட்ட திரையரங்குகள் கூட மீண்டும் புத்துயிர் பெற்று விடும்.




வெள்ளி, 26 ஜூன், 2009

வால்மீகி விமர்சனம்

அல்லாருக்கும் வணக்கம் அண்ணாத்த, இன்னைக்கு ரெண்டு படம் ரிலீசு. நாடோடிகள், வால்மீகி. ஆனா, நா மொதல்ல பாத்தது வால்மீகி.
பேப்பர்ல வௌம்பரத்தலாம் பார்த்து மிரசலாயி சும்மா அஸத்த போறாங்கன்னு பார்த்தா, ராமாயணத்த எழுதன வால்மீகி பேர வச்சிட்டு, நம்ம கதைய கொடுத்திருக்காங்கப்பா.
அது ஒண்ணுமில்ல, ஒரே வரில சொல்லிடலாம்பா படத்தோட கதைய. ஒரு பிக்பாக்கெட் திருடன, ஒரு பொண்ணு திருத்த நினைக்கிறா, இதாம்ப படத்தோட கதையே. படம் பாக்கச் சொல்ல தேவையில்லாம இந்த ஆனந்த விகடன் எல்லா படத்துக்கும் மார்க்கு போடுவாங்களே, அது ஞாபகம் வந்துச்சுப்பா. அப்பதான் புரின்ச்சி. மார்க் போடுறது ஈஸி. படிக்கிறது கஷ்டம்பா. (அதாவது படம் எடுக்கிறது). படத்தோட டைரக்டரு, நம்ம சிவாஜி ஷங்கர் கிட்ட தொழில் கத்துக்கனவராம்பா. அவராட்டம் மிரசலா எடுக்கத் தெரியலப்பா. நல்லாத்தான் கதைய யோசிச்சிருககாரு, ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா.

படத்தோட ஹீரோ பேரு அகில். கல்லூரி படத்துல அறிமுகமானரே அவரு. பாண்டி கேரக்டர்ல கரீட்டாதான் நடிச்சிருக்காருப்பா. அச்சு அசல் லோக்கல் பிக்பாக்கெட் மாதிரியே கீறாரு. அதுக்கே நூத்துக்கு எண்பது மார்க் போட்டுடலாம்பா.
ஹீரோயினியா ரெண்டு பேரு, படம் பாக்கும் போதுதான் பேர கேட்டுக்குட்டன்பா. ஒரு பொண்ணு மீரா நந்தன். இன்னொரு பொண்ணு தேவிகா. இவங்களை பாக்கச் சொல்ல நம்ம உஷா அக்கா(சிம்பு அம்மா, அண்ணன் டிஆர் சம்சாரம்) சினிமால ஹீரோயினா நடிக்கும் போது எப்படி இருந்தாங்களோ அப்படி கீறாங்கப்பா. மீரா நந்தன், கேரக்டர பாக்கும் போது சிரிப்பா வருதுப்பா. நம்ம தமிழ் சினிமால படிச்ச பொண்ணுங்களுக்குலாம் காதலிக்கிறதுக்கு நல்ல பையனே கிடைக்கிறதில்லப்பா. ஒண்ணு பொறுக்கிய காதலிக்கிறாங்க, இல்ல திருடன காதலிக்கிறாங்க, இல்ல பிக்பாக்கெட்ட காதலிக்கிறாங்க. படிச்ச கம்ப்யூட்டர் இஞ்சினியர் யாருமே கிடைக்க மாட்ங்கிறாங்கப்பா. ரெண்டு பேர பத்தியும் என்னாத்த சொல்றது.
நம்ம ராஜா, என்னடா பாண்டி பாட்ட தமாசா பாடியிருக்காருப்பா.
படத்துல காமெடி இல்ல, பைட்டு இல்ல, மேட்டர் பாட்டு இல்ல, பார்க்க அழகா யாரும் இல்ல, இப்படி எத்தனையோ இல்ல.....

புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.

விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...


என் மார்க் 3௦0/100


பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.

ஞாயிறு, 21 ஜூன், 2009

தமிலிஷில் என்ன நடக்கிறது

இன்று என்னுடைய புதிய இடுகையை பதிவு செய்து விட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தேன். ஆனால் தமிலிஷில் என்னுடைய இடுகை, தொடரும் இடுகைகள் பகுதியில் வரவேயில்லை. ஏன் இந்த தாமதம் எனத் தெரியவில்லை. அது புரியாமல்தான், அதற்கும் ஒரு இடுகையை போடுகிறேன். தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

நாளை அறிவிப்பாரா இளைய தளபதி விஜய் ?


எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பேன் என்று தெரிந்துதுன் இளைய தளபதி என்ற பட்டப்பெயரை தன்னுடன் விஜய் இணைத்துக் கொண்டார் என்று தெரிகிறது. கடந்த ஒரு வார காலமாக விஜய் அரசியலில் குதிப்பாரா என மீடியாக்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வரும் வேளையில் விஜய் அவருடைய பிறந்த நாளை, நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக சில விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ முகாம், கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி திறப்பு விழா என அரசியலுக்கு முன்னோட்டமாக நடை பெற உள்ளதாக தகவல். அது மட்டுமல்ல நாளை மீடியாவை விஜய் சந்தித்து பேசவும் உள்ளார். அப்போது கண்டிப்பாக நம் நிருபர்கள் அரசியல் கேள்விகளைத்தான் அதிகம் கேட்பார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் விஜய் ஒரு தெளிவான பதிலைத் தெரிவிப்பார் என நம்பலாம். எம்ஜிஆர் பெயரை படங்களுக்கு வைக்க ஆரம்பித்ததன் உள்நோக்கம் இப்போதுதான் புரிகிறது. வேட்டைக்காரனைத் தொடர்ந்து, உரிமைக் குரல் என அவருடைய அடுத்த படத்திற்கு தலைப்பாக தேர்வு செய்திருக்கிறார் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த்தைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவதால் என்ன நடக்கும் என போகப் போகத்தான் தெரியும். சூப்பர் ஸ்டாரே அரசியலுக்கு வர தயங்கும் போது விஜய்யின் அரசியல் பிரேவேசம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். விஜய்யின் அரசியல் விஜயம், ஜெயத்தில் முடியுமா என்று ?

வியாழன், 18 ஜூன், 2009

நமீதா - அறிமுகம்







நிஜப் பெயர் - நமீதா கபூர்

மற்றொரு பெயர் - பைரவி

பிறந்த தேதி - மே 10, 1980

ஊர் - சூரத், குஜராத்

முதல் படம் - சொந்தம் (தெலுங்கு) - 2002

முதல் தமிழ்ப்படம் - எங்கள் அண்ணா (2003)

இதுவரை நடித்துள்ள படங்கள்

சொந்தம், ஜெமினி, ஒகே ராஜு ஒகே ராணி, ஒக ராதா இதரு கிருஷ்ணலு பெல்லி, அய்தே ஏன்டி, நயாகடு, பில்லா - தெலுங்கு

எங்கள் அண்ணா, ஏய், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிர, தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவனில்லை, அழகிய தமிழ்மகன், பில்லா, சண்ட, பாண்டி, பெருமாள், தீ, 1977,

லவ் கே சக்கர் மெய்ன் - ஹிந்தி, நீலகண்டா, இந்திரா - கன்னடம்,

இந்திரவிழா - விரைவில்

ஜகன்மோகினி, பிளாக்ஸ்டேஷன், தேசத்துரோகி - படப்பிடிப்பில்

ஜோடியாக நடித்துள்ளவர்கள்

விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், ஸ்ரீகாந்த், விஜய், அஜித், சத்யராஜ், பிரசாந்த், பார்த்திபன், ஜித்தன் ரமேஷ், எஸ்ஜே சூர்யா, ஜீவன், ராகவாலாரன்ஸ், சுந்தர் சி,


சாதனை
கூகுள் ஹிட்ஸ் (இப்ப நம்ம ஹிட்ஸ் ஏறுமா ??? )


புதன், 17 ஜூன், 2009

நயன்தாரா - ஒரு அறிமுகம்







நிஜப் பெயர்
டயானா மரியம் குரியன்
பிறந்த தேதி
நவம்பர் 18, 1984

சொந்த ஊர்
திருவல்லா, பத்தனம்திட்டா, கேரளா
படிப்பு
பி.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர்

அறிமுகமான படம்
மனசினக்கரே (மலையாளம்) வருடம் 2003

மோகன்லாலுடன் நடித்த படம்
நாட்டுராஜாவு

மம்முட்டியுடன் நடித்த படம்
தஸ்கரவீரன்

தமிழில் அறிமுகம்
ஐயா - வருடம் 2004

இதுவரை நடித்துள்ள படங்கள்
மனசினக்கரே, விஸ்மயதும்பத்து, நாட்டுராஜாவு, தஸ்கரவீரன், ராப்பகல், 20/20, பாடிகார்ட் - மலையாளம்
ஐயா, சந்திரமுகி, கஜினி, சிவகாசி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், சத்யம், ஏகன், வில்லு, ஆதவன் - தமிழ்
லக்ஷ்மி, பாஸ், யோகி, துபாய் சீனு, துளசி, கதாநாயகடு, சத்யம், அதுர்ஸ், ஆஞ்சநேயலு - தெலுங்கு

ஜோடியாக நடித்தவர்கள்
ஜெயராம், மம்முட்டி, மோகன்லால்
சரத்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், எஸ்ஜே சூர்யா, சிம்பு, ஜீவா, அஜித், தனுஷ், விஷால்,
வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ்,ரவிதேஜா

அடுத்து வர இருக்கும் படம்
கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன்












செவ்வாய், 16 ஜூன், 2009

இதுதான் கலாச்சாரமா ?







திரைப்பட விழாக்களில் நம் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்க்கும் போது, நம் கலாச்சாரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. சமீப காலமாக அவர்கள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்தால் ஆஆஆஆஆவெனப் (பார்க்கத் தூண்டுகிறது) என நினைக்க வேண்டாம், ஆ வென ஆத்திரப்பட வைக்கிறது. அவரவர் வீட்டுக்குள் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். பொது இடங்களில் விழாக்களுக்கு வரும் போது குறையில்லாத நிறைவான உடை அணிந்து வந்தால் என்ன ? தங்களை பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி வருகிறார்களா, அல்லது தாங்களும் அழகுதான் என காட்டிக் கொள்வதற்காக வருகிறார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக வட இந்திய நடிகைகள்தான் இப்படி வருகிறார்கள் என்று பார்த்தால் நம்ம ஊர் நடிகைகள் கூடி புடவையிலும் கவர்ச்சியாக வருகிறார்கள்.
புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகள் இப்படி வருவதுதான் ஒரு கொண்டாட்டமே(?) . அப்போது நடக்கும் தள்ளு முள்ளுகளை நீங்கள் பார்க்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தான் நம்மவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள் என சொல்லப்படுவது ஒரு காரணம்தான்.
அரை குறை ஆடையைப் பற்றி எழுதி விட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டது நியாயமா என நீங்கள் கேட்டால், உங்களின் ஓட்டுக்களின் படி நான் அதை பிறகு நீக்கி விடுகிறேன். பின்னூட்டத்தில் உங்கள் கருக்துக்களை வெளியிடுங்கள். அப்படியே கருத்துக் கணிப்பிலும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

திங்கள், 15 ஜூன், 2009

தோனி செய்தது நியாயமா ?

நேற்றைய டி௨0 மேட்ச்சில் இந்தியா தோற்றது என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. முதல் டி௨0 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரை இறுதியில் ஆடக்கூட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் என சொல்ல முடியாது. தெரிந்தே செய்த தவறுதான் என்று சொல்ல வேண்டும். அதிலும் சமீப காலமாக, சில வருடங்களாக எட்டிப் பார்க்காத அரசியல் இந்திய அணியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. சில இன்னிங்சில் சிறப்பாக ஆடினார் என்பதற்காக சேவாக், யுவராஜ் போன்ற சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தோனியை கேப்டான ஆக்கியது மிகப் பெரும் தவறு. சிறந்த வீரர்களான அவர்களுக்கு தோனி எப்படிப்பட்ட மரியாதையைக் கொடுக்கிறார் என்பது இப்போது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதிலும் சேவாக்கை காயம் காரணமாக அணியை விட்டு திடீரென நீக்கியதும் மாபெரும தவறு. அதை மறைப்பதற்காக தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் சேவாக் இல்லாததும் ஒரு காரணம் என சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ஆடிய பதினோரு வீரர்கள் என்ன ஆடினார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஐபிஎல் போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை, ஆர்பி சிங்கைத் தவிர. ஒரு உலகக் போப்பை போட்டிக்கு முன்பாக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தியதே ஒரு மாபெரும் தவறு. பார்மில் இல்லாத வீரர்களுடன், ஐபிஎல் ஆடி களைப்படைந்த வீரர்களுடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றதும் தவறான ஒன்றாகும். உலகக் போப்பையையும், தேர்தலையும் காரணமாக வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையே நடத்தாமல் விட்டிருக்கலாம். இப்போது யாருக்கு நட்டம் ? இந்திய அணிக்குத்தானே.

இங்கிலாந்திற்கு எதிராக டாஸ் ஜெயித்த பின் நாம் பேட்டிங் செய்யாமல் விட்டது ஒரு தவறு, பின்னர் ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் கத்துக்குட்டியான ரவீந்தர ஜடேஜாவை முன்னால் ஆட வைத்ததும் ஒரு மாபெரும் தவறு.

விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்த காலம் போய் தற்போது வேறு எவற்றிற்கோ முன்னுரிமை அளிக்கும் காலம் வந்துவிட்டது.

பார்மில் இல்லாத வீரர்களுக்கு முதலில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். எந்த விதமான அரசியல் விஷயங்களும் வீரர்களுக்குள் வராமல் பார்த்துக கொள்ள வேண்டும்.

வேலை வெட்டியை விட்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இனியாவது இவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களா ?

ஞாயிறு, 14 ஜூன், 2009

ஆயிரத்தில் ஒருவன் - விரைவில் வருகிறான்(ர்)







இதோ வருது அதோ வருது என போக்கு காட்டிக் கொண்டிருந்த , ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இன்று 14ஜுன் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றின் இசை வெளியீடு இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுவது இதுதான் முதல் தடவை. பட்ஜெட் எகிறிவிட்டது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இருந்து வந்தது. 30கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆனதாக ஒரு தகவல். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடித்திருககும் படம். ரீமா சென், ஆன்ட்ரியா , மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இந்த படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 2009ல் தொடங்கி 7ஆம் நூற்றாண்டுக்கு கதை பயணிப்பதாக ஒரு தகவல். படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போதே படத்தின் வித்தியாசம் புரியும். இயக்குனர் செல்வராகவனுக்கு இந்த படம் நிச்சயம் பெரிய பேர் சொல்லும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.

புதன், 10 ஜூன், 2009

சிம்புவின் போடா போடி-க்கு போட்டியாக வாடி போடி...




சிம்பு அடுத்து இயக்கி நாயகனாக நடிக்க இருக்கும் படம் போடா போடி, அவருக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.




இதனிடையே இந்த டைட்டிலுக்கு எதிராக(?) வாடி போடி என ஒரு படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அந்த படத்தை இயக்க இருப்பவர் சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கிய தருண்கோபி. விஷால், சிம்பு இவர்களை வைத்து படத்தை இயக்கி தொந்தரவுகளைத்தான் அனுபவித்தேன் என வெளிப்படையாக கூறியவர் தருண்கோபி. தற்போது வெளிவந்துள்ள மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தான் நடிக்க வந்ததற்கு காரணம் ஹீரோக்கள் கொடுத்த டார்ச்சர்தான் என்கிறார். அது மட்டுமல்ல, தன்னுடைய படம் ஓடக் கூடாது என்பதற்காக தவறான பிரச்சாரத்திலும், படத்தின் சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.




இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து இயக்கப் போகும் படத்திற்குத்தான் வாடி போடி என டைட்டில் வைத்திருக்கிறார், சிம்புவின் டைட்டிலுக்குப் போட்டியாக.

சனி, 6 ஜூன், 2009

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நிஜமா ?


கடந்த இரண்டு நாட்களாக தமிழ் திரையுலக வட்டாரத்திலும், பத்திரிகை உலக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பு. பிரபுதேவா, நயன்தாரா இருவரும் திருமணம்செய்து கொண்டு விட்டதாக ஒரே பேச்சு. குறிப்பாக தெலுங்கு திரையுலகத்தில் இருந்துதான் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு சில தொலைக்காட்சிகள் இதை செய்தியாக வெளியிட்டதாகவே தகவல். தமிழ் பத்திரிகைகளில் சிலவற்றிலும் இந்த செய்தி வந்து விட்டது. பொதுவாகவே நயன்தாராவைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசு வந்து கொண்டிருக்கும். மீண்டும் அப்படித்தான் ஒரு கிசுகிசு என பத்திரிகை வட்டாரத்தில் நினைத்துக் கொண்டிருந்தனர்.


மேற்கொண்டு இந்த தகவலை நயன்தாரா வட்டாரத்தில் விசாரித்த போது, இத்தனை நாட்கள் அவர் ஆதவன் படத்திற்காக கல்கத்தாவில் இருந்ததாகவும், தற்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் எனவும் கூறுகிறார்கள்.


இது மீண்டும் ஒரு வதந்தியா என்பது போகப் போகத்தான் தெரியும்.

வியாழன், 4 ஜூன், 2009

எங்கே போகிறார்கள் நம் ஹீரோக்கள்

நமது ஹீரோக்களுக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் , ஆக்ஷன் ஹீரேவாகத்தான் ஆக வேண்டும் என்ற நினைப்புதான் இருக்கிறது. யாருக்குமே நல்ல நடிகனாக வேண்டும் என்ற நினைப்பே இல்லை. நல்ல நடிகனாக எப்படி ஆவது, அதற்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஆக்ஷன் கதைகளாகத்தான், அதுவும் பழி வாங்கும் கதைகளாகத்தான் இருக்கிறது. ஒன்று அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது காதலியை கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது அம்மாவின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார்கள், அல்லது காணாமல் போன குடும்பத்தாரைத் தேடி ஊர் விட்டு ஊர் வருகிறார்கள்.

நல்ல கதைகளுக்கு பஞ்சம், எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் மட்டும் அலைந்து கொண்டிருக்கவில்லை, தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். ரஜினி , கமல் இருவர் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆனார்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் நல்ல கதைகள் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதையை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் இரண்டு படம் ஹிட்டான உடனேயே எதற்கோ ஆசைப்பட்டு பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்டைல் என்ற பெயரில் இவர்கள் நடிப்பதும் நம்மை ஐயோ என்று அலற வைத்து விடுகிறது. வராத பொருந்தாத ஒன்றை ஏன் செய்ய வேண்டும்.

பாவம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள், நான்கு காதல் காட்சிகள், நான்கு பாடல்கள், கொஞ்சம் முத்தம், கொஞ்சம் கோபம் என அவர்களுடைய கடமை முடிந்து விடுகிறது. ஆடைகளில் கூட கொஞ்சம்தான், மொத்தத்தில் கொஞ்சமாகக் கொஞ்சி கொடுத்த வேலையை செய்து விட்டு போய்விடுகிறார்கள்.

இதற்கடுத்து பாடல்கள், கண்டிப்பாக ஹீரோவின் அறிமுகப்பாடல் இருந்தே ஆக வேண்டும், நான் வல்லவன், நான் நல்லவன், சூராதி சூரன், வீராதி வீரன், பார்த்தால் பசு, பா்ய்தால் புலி என்ற ரேஞ்சில் பாடல்கள் இருக்கும். பின்னாடி ஒரு நூறு பேர் ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் இரண்டு டூயட் பாடல்கள், நடுவில் ஒரு சோகப் பாடல், கடைசியாக கண்டிப்பாக குத்துப் பாடல், கிளைமாக்சில் பறந்து பறந்து சண்டைய இட்டே ஆக வேண்டும். ராவணனாக இருந்தாலும் பேசிப் பேசியே அவர்களை ராமனாக மாற்ற வேண்டும்.

இப்படி ஒரு பார்முலாவுக்குள் இருந்தால் என்னதான் ஆவது. இந்த ஆண்டில் பசங்க படத்தை் தவிர, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியாதா என நமது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதன், 3 ஜூன், 2009

இளையராஜாவின் தகுதியைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை

கொஞ்ச நாளாக ஓய்ந்து போயிருந்த ராஜா ரஹ்மானைப் பற்றிய ஒப்பீடு மீண்டும் தேவையில்லாமல் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் இசையைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை. விமர்சனம் என்ற பெயரால் ஒருவரது திறமையைப் பற்றி தேவையற்ற விவாதம் செய்யக் கூடாது என்பதே என் கருத்து. திறமையை அளவிடுவதற்கு எது அளவுகோல். இவை ஒன்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தும் பரீட்சையல்ல, திறமையை அளவிடுவதற்கு.

10வருடங்களில் 100படங்களுக்கு இசையமைத்தும், அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு விருதை வாங்குவதும் பெரிய விஷயமல்ல. மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுவதே மிகப் பெரும் விருது. அன்று முதல் இன்று வரை இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒலிக்காத வானொலிகளும் இல்லை, ஒளிக்காத தொலைக்காட்சிகளும் இல்லை.

இந்திப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்திய அளவில் பெயர் வாங்குவதும், ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து விட்டு பெயர் வாங்குவதும், பெரிய விஷயமில்லை.

எந்த விதமான பின்னணியும் இல்லாமல், எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு பெயர் வாங்குவது முக்கியமான விஷயம்.

தயவு செய்து இனிமேலாவது இசைஞானியின் இசையப் பற்றி ஏதும் விவாதிக்காமல் இருப்பது நல்லது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் VS நடிகை , விமர்சன சண்டை


இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும், பிரபல நடிகையும் ,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வரும் சுஹாசினிக்கும் புதிதாக மோதல் எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்த, ஷக்தி சிதம்பரம் இயக்கி, ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தை சுஹாசினி மிகவும் மோசமாக விமர்சனம் செய்ததே இதற்குக் காரணம். இன்னும் சொல்லப்போனால் சுஹாசினி அந்த படத்தைப் பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே சென்று விட்டதாக ஒரு தகவல். அப்படி பாதி படத்தை மட்டுமே பார்த்த சுஹாசினி அப்படி ஒரு விமர்சனம் செய்தது தவறான ஒன்று.


பொதுவாகவே அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி கொஞ்சம் மோதாவித்தனத்துடன்தான் நடந்து கொள்வார். ஏதோ திரைப்படங்களைப் பற்றி கரைத்துக் குடித்தவர் போலத்தான் பேசுவார். சில வாரங்களுக்கு முன் கூட கார்த்திக் அனிதா படத்தில் நடித்த ஹீரோயினை கேரளாவில் இருந்து அழைத்து வந்தது, வேஸ்ட் என சொன்னார். இவர் அறிமுகமான படங்களில் எல்லாம் எப்படி இருந்தார் என்பது நமக்குத் தெரியாதா.


பதிலுக்கு ஷக்தி சிதம்பரமும் சுஹாசினியை தாக்கி பேட்டி கொடுத்திருக்கிறார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல் எறிகிறார் என்று சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் நேரடியாகத் தாக்காமல் சுஹாசனியின் கணவரான மணிரத்னத்தின் படங்களைப் பற்றி தாக்கியிருக்கிறார். தகராறு சுஹாசினிக்கும் ஷக்திக்கும்தான். அப்படியிருக்க ஷக்தி மணிரத்னத்தை தாக்குவது தேவையில்லாத ஒன்று. ராமாயண, மகாபாராதக் கதைகளை மணிரத்னம் காப்பியடித்து இயக்குவதாகக் கூறியிருக்கிறார். மணிரத்னம் சொந்தமாக எந்த கதையை எழுதி எடுத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.


விமர்சனம் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளைக் கூறுவது இப்போது வாடிக்கையாகி விட்ட ஒன்று. எப்படியோ கொஞ்ச நாளைக்கு இந்த சண்டையை வேடிக்கை பார்க்கலாம்.




செவ்வாய், 2 ஜூன், 2009

இசைஞானியை சந்தித்தேன்

என்னுடைய பல நாள், அல்ல பல வருடக் கனவு, இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பது. அந்த கனவு இன்று நனவானது. அந்த நிமிடத்தை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது. பல விழாக்களில் அவரை நேரில் பார்த்திருந்தாலும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை. ஆனால் இன்று அந்த குறைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற போது, ஒரு மாபெரும் திறமைசாலியை நாமும் நெருக்கத்தில் சந்தித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அலை பாய்ந்தது. அவரை சந்தித்த அந்த ஐந்து நிமிடங்களை என் மனதுக்குள் அப்படியே வைத்து பூட்டி விட்டேன். எனக்குள் ஏற்பட்ட பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஆயிரம் சொல்லுங்கள் இசை என்றால் இளையராஜா தான், இளையராஜா மட்டும்தான்.

இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்


இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 67வது பிறந்த நாள். 1976ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் நம்மை இசையால் தாலாட்ட வைத்தவர் இன்று வரை ஏறக்குறைய 33ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற சிறிய ஊரில் பிறந்தவர், இந்த அளவிற்கு பெயரையும் புகழையும் அடைவதென்பது சாதாரண விஷயமல்ல. சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தமிழ்சினிமாவில் இளையராஜா, பாராதிராஜா, வைரமுத்து போன்றவர்களின் வரவு தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது என்று சொன்னால் அது மிகையில்லை.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசையமைத்து வரும் இளையராஜாவுக்கு ஒவ்வொரு மொழியிலும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.


ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட், திருவாசம், சிம்பெனி என சினிமாவித் தவிர அவருடைய திறமைக்கு சான்றாக இருப்பவை இவை.


900படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானியின் சாதனையை மீண்டும் ஒருவர் முறியடிப்பதென்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


அந்த சாதனையாளரை, தமிழ் இசை மன்னனை இன்றைய நாளில் வாழ்த்துவதில் பெருமையடைவோம்.