ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம் விமர்சனம் - பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பொக்கிஷம் திரைப்படம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களாக இருந்தது. நேற்று இந்த நீளம் குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேல் படத்தின் சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பல சிறிய பாடல்களும், கதைக்கு தேவையில்லாத சில காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டன. இதை இயக்குனர் சேரனே தெரிவித்துள்ளார்.


பெரும்பான்மையான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று கலைஞர் தொலைக்காட்சியிலும், இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பங்கு பெற்ற சேரன், படத்திற்குண்டான வரவேற்பு போகப் போக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


மசாலாத்தனமான படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு, பசங்க, நாடடோடிகள், பொக்கிஷம் மாதிரியான படங்கள்தான் பொக்கிஷமாக அமையும் என்பது உண்மையான திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனம் என்ற பெயரில் பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஒரு வரைமுறை இல்லாமல், என்ன வேண்டுமானால் எழுதலாம் என நினைப்பது தவறான ஒன்று.


மூத்த பதிவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் விமர்சனத்தை நானும் படித்தேன். அவர்கள் சேரனின் நடிப்பை மிகவும் குறை கூறியிருந்தார்கள். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயங்கும் போது பாவம் அவர் என்ன மட்டும் என்ன செய்வார், இப்படித்தான் ஆட்டோகிராப் படத்திற்கும், விக்ரம், விஜய், பிரபுதேவா போன்ற நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. அதன் பின்தான் சேரனே அந்த படத்தின் நாயகனாக நடித்தார். அது இந்த படத்திற்கும் நடந்திருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க மறுத்திருக்கின்றனர்.


இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நேயரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சேரன் இந்த ஆதங்கத்தை தெரித்திருந்தார். விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் இந்த படத்திற்கான வரவேற்பும், வெற்றியும் பிரமாதமாக அமைந்திருக்கும் என குறைபட்டுக் கொண்டிருந்தார்.


நம் மூத்த பதிவர்கள், அப்படிப்பட்ட முன்னணி ஹீரோக்களுக்கு எது நல்ல படம், எது மசாலாப்படம் என புரிய வைத்து இம்மாதிரியான படங்களில் அவர்கள் நடிப்பதற்கு கால்ஷீட் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.


வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என கண்டபடி விமர்சனம் எழுதுவதை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் என் அன்பான மூத்த பதிவர்களே.


சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.


படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டு, பின்னர் குறைக்கப்பட்ட ஆட்டோகிராப், மாபெரும் வெற்றி பெற்றது. அது போல இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம் - தமிழ் சினிமாவுக்கு


எத்தனையோ காதல் படங்களை பார்த்து வருகிறோம். ஆனால் அவற்றில் ஒரு சிலதான் நம் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த ஒரு சில படங்களில் இந்த படமும் இடம் பெறும்.


இன்றைய தலைமுறை, காதல் கடிதம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்களா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஈமெயில், எஸ்எம்எஸ் என்ற அளவில்தான் அவர்களின் காதல் பரிமாற்றம் இருக்கிறது. மறந்து போன அல்லது மறக்கப்பட்ட அந்த காதல் கடிதங்களை இந்த படத்தின் வாயிலாக மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார் சேரன்.


ஒரு காட்சியில் காதலி பத்மப்ரியாவுடன் டிரங்கால் போட்டு பேசுவதற்காக அவர் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது, இன்று பக்கத்து பக்கத்து அறையில் உட்கார்ந்து கூட செல்போனில் கூப்பிட்டு பேசுவதை நினைத்தால் , ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது. காதலியின் கையெழுத்துடன், அந்த காதல் உணர்வுகளை கடிதங்களின் வாயிலாக நாம் உணரும் அழகே தனிதான். காதல் கடிதம் எழுதிய காலத்து மக்களுக்குத்தான் அதன் ரசனை புரியும். கிறுக்கலான கையெழுத்தாக இருந்தால் கூட அது ஒரு ஓவியம் போலத்தான் தெரியும்.


இப்படி காதல் கடிதங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைத்தான் அழகான காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார் சேரன். கல்கத்தாவில் இருக்கும் சேரனுக்கும் நாகூரில் இருக்கும் பத்மப்ரியாவுக்கும் காதல். இந்த காதலுக்கு பாலமாக இருப்பதே அவர்களின் காதல் கடிதங்கள்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கடிதப் பரிமாற்றம் திடீரென நின்று விட பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


காட்சிக்கு காட்சி காதல் கடிதங்களே வந்து கொண்டிருப்பது கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும், அதிலும் ஒரு ரசனை இருக்கத்தான் செய்கிறது. படத்தின் முடிவு நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். திடீரென படத்தை முடித்து விட்டது போல் தோன்றினாலும் அதுதான் சரியான முடிவாகவும் மனதில் படுகிறது.


ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு சேரன் தனக்கென உருவாக்கி நடித்திருக்கும் லெனின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்திருக்கிறார்.


நதீராவாகத்தான் தெரிகிறார் பத்மப்ரியா. அவருடைய கண்கள் அதிகம் பேசுகின்றன.


விஜயகுமார், இளவரசு, ஆர்யன் ராஜேஷ் இப்படி ஒரு சில கதாபாத்திரங்களே நடித்திருந்தாலும், அனைவரின் பங்களிப்பும் சரியாக அமைந்துள்ளது.


சபேஷ் முரளியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உயிரோடத்தைக் கொடுத்திருக்கின்றன. நிலா, பாட்டு திரும்பத் திரும்ப கேட்க வைக்கும்.


ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, வைரபாலனின் கலையும், படத்தின் கால ஓட்டங்களுக்கு தக்கபடி பயணிக்க வைக்கின்றன.


நல்ல படங்களை ரசிக்கும் தமிழக மக்கள் நிச்சயம் இந்த படத்தையும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக மாற்றுவார்கள் என நம்பலாம்.


வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்த நாள்




தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதேவியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும், இந்திக்கு செல்லும் வரை தமிழ் திரையுலகில் கனவுக்கன்னியாக பவனி வந்தவர். சிவாஜி, கமல், ரஜினி என பெரிய ஹீரோக்களோடு மட்டுமல்லாமல் சிறிய ஹீரோக்களோடும் நடித்து பெரும் புகழ் ஈட்டியவர். இந்திக்குச் சென்றதும் ஏனோ அவர் தமிழ் ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் மறந்து விட்டாலும், நாம் அவரை இன்னும் மறக்காமல்தான் இருக்கிறோம்.




1967ல் வெளிவந்த கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும நம்பர் 1 இடத்தில் பல வருடங்களாக கோலோச்சியவர்.1976ல் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கமலுடன், குரு, சங்கர்லால், சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, நீலமலர்கள், மூன்றாம் பிறை, 16வயதினிலே ஆகிய படங்களிலும் ரஜினியுடன், தர்மயுத்தம், ப்ரியா, போக்கிரிராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவற்றில் பல படங்கள் வெற்றிப் படங்களே.




தெலுங்கில் என்டிஆர், ஏஎன்ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், போன்றோருடனும், பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.




இந்தியில் இவருடைய வெற்றிப் படங்களுக்கு கணக்கேயில்லை. பல வருடங்களாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து சாதனை படைத்தவர்.பல பில்ம்பேர் விருதுகளையும், ஆந்திர, தமிழக அரசு விருதுகளையும், வென்றவர்.




மூன்றாம் பிறை படத்தில் தேசிய விருதை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்.




100 படங்களுக்கும் மேல் நடித்த பெருமை இவருக்கு உண்டு.




அந்த பேரழகிக்கு ஆகஸ்ட் 13 இன்று பிறந்த நாள்.

சுதந்திர தினத்துக்கு ஒரே ஒரு படம்தான்


தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு, சுதந்திர தினம் இவைதான் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்கள். இந்த நாட்களில் எப்படியும் குறைந்தது ஐந்து படங்களாவது வெளிவரும். ஆனால் இந்த சுதந்திர தினத்தன்று ஒரே ஒரு படம்தான் வெளி வர இருக்கிறது. அதுவும் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது. சேரன் இயக்கி நடித்திருக்கும் பொக்கிஷம் படம்தான் அது. கந்தசாமியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அடுத்த வாரமோ அல்லது அதற்கடுத்த வாரமோ வெளியாகும் எனத் தெரிகிறது. ஐந்து படங்களாவது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வெறும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவருவது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விஷயமல்ல. சென்ற மாதத்தில் வெளிவந்த படங்களில் எதுவுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. டிடிஎஸ், க்யூப், டிஐ இப்படி எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு, திரைப்படத்தின் வெற்றி என்பது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என உடனடியாக கண்டு பிடித்து அந்த குறையை அகற்றினால்தான் தமிழ் சினிமா மேலும் வளர வழி பிறக்கும். இல்லையேல் திரைப்படங்களை இனி தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க இயலுமோ என அச்சப்பட வேண்டியிருக்கிறது.


ஒரு படத்தயாரிப்பு செலவும் கோடிகளைத் தாண்டி பத்து கோடி வரையில் செல்வதும இதற்கு ஒரு காரணமாக அமையலாம். அல்லது நூறு ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதும் காரணமாக இருக்கலாம். ஒன்று செலவுகளைக் குறைக்க வேண்டும், அல்லது கட்டணங்களை குறைக்க வேண்டும, நடிகர்களும் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.இப்படி நாம் என்ன வேண்டுமானாலும் யோசனைகளைச் சொல்லலாம்.


ஆனால் நல்ல கதையுடன் தரமான படம் வந்தால் அது தானாகவே வெற்றி பெற்று விடும் என்பதை மறந்து விடக்கூடாது, மறுக்கவும் கூடாது.


திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்றென்றும் இனியவை - 1

நாமெல்லாம் ஒரே சினிமா பாட்டு பைத்தியம்னு சொல்லலாம். அதுலயும் 70கள்லயும் 80கள்லயும் வந்த பாட்டுன்னா அப்படி ஒரு பைத்தியம். சில பாடல்கள் என்ன படம் ஏதுன்னு கூட தெரியாது, ஆனால் பாட்டுலாம் அப்படியே ஞாபகம் இருக்கும்.

அந்த விதத்துல எனக்கு சின்ன வயசுல தூர்தர்ஷன்ல, ஒளியும் ஒளியும் நிகழ்சசியில அடிக்கடி போடப்பட்ட பாட்டு, மல்லிகை மோகினி படத்துல இருந்து, எஸ்பிபி பாடினதுன்னு நினைக்கிறேன்.

மேகங்களே, இங்கு வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள், யாரென்று சொல்லுங்கள்....

என்ற பாடல் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. இப்போது கூட ஏதோ ஒரு வேலையாக இருக்கும் போது அந்த பாடல் வடிவம் கண்ணுக்குள் தோன்றி மறையும்.

வெள்ளை ஜிப்பா போட்டுக் கொண்டு நாயகன், ஒரு விரக்தியில் பாடும் பாடல் அது- இடையிடையே பாம்பு வேறு வந்து போகும். இன்றைய தொலைக்காட்சிகளிலும், மியூசிக் சேனல்களிலும் இந்த பாடலை இதுவரை பார்த்ததே கிடையாது.

பதிவில் எழுதப் போகிறோம். சரி யார் நடிகர், இயக்குனர் என அலசிப் பார்த்தேன்.

அந்த படம் வெளிவந்த ஆண்டு, 1979. இயக்கம் - துரை, இசை - ஜிகே வெங்கடேஷ், நடிகர்கள் விக்ரம் ( இவர் வேறு, கந்தசாமி விக்ரம் அல்ல), லதா.

இந்த என்றென்றும் இனியவை, தொடரும்......

கருத்துக்களை வரவேற்கிறேன், அப்படியே கொஞ்சம் ஓட்டு போடுங்கன்னா, மறந்துடாம...நன்றி.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பிளாக்கை சரி செய்ய உதவி வேண்டும்

என்னுடைய பிளாக்கின் ஹோம் பேஜ் ன் மேல் புறம் ஒரு இடைவெளி வருகிறது. அதை சரி செய்ய என்ன வழி. யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

தொலைந்து போன நண்பர்கள்

அனைவருக்கும் நணப்கர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

நண்பர்கள் என்றவுடனே எனக்கு தொலைந்து போன என் நண்பர்களைப் பற்றித்தான் ஞாபகம் வருகிறது. இன்றைய தலைமுறைக்குப் பிரச்சனையில்லை சிறு வயது முதலே, தொலைபேசி, கைபேசி, ஈமெயில், என பல விதங்களில் தொடர்புப் படுத்திக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதெல்லாம் கிடையாது.

எனக்கு ஞாபகம் உள்ள வரையில் என்னுடன் ஐந்தாவது வரை படித்த இரு நண்பர்களைப் பற்றி எப்போதுமே மறக்க முடியாது. ஒருவன் விஜயசங்கர், செங்கல்பட்டு அருகிலுள்ள, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்தவன், இன்னொருவன் குணசேகர், செங்கல்பட்டைச் சேர்ந்தவன். இவன் இறந்து விட்டதாக பல வருடங்கள் கழித்து தகவல் வந்தது. ஐந்தாவது வகுப்பு வரை நான், விஜயசங்கர், குணசேகர் மூவரும்தான் ஒன்றாக அமர்ந்திருப்போம். என்ன வாங்கி சாப்பிட்டாலும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். அதிகமாக செலவு செய்தது குணசேகராகத்தான் இருக்கும். இவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தமடைந்தேன். விஜயசங்கர் இப்போது எங்கிருக்கிறான் என்றே தெரியாது.

அடுத்து ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்த போது எட்டாவது வகுப்பில் சுரேந்திரன் என்ற நண்பன் கிடைத்தான். எனக்கும் அவனுக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். படிப்பு, விளையாட்டு, மற்ற விஷயங்கள் என நானும் அவனும் போட்டி போட்டுக் கொண்டே இருப்போம். ஒரு ஆண்டு விழாவில் அவன் பாட இருப்பதைக் கேள்விப்பட்டு நானும் பாட (?) ஆசைப்பட்டு ஒரு பாடலையும் பாடினேன், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்...பாடல் அது. இன்றும் அந்த பாடலை முழுவதுமாகப் பாடுவேன். ஒன்பதாவது வந்த போது அவன் திருக்கழுக்குன்றம் சென்று விட்டதாகத் தகவல். அதன் பின் இரண்டு வருடம் கழித்து பத்தாவது முடித்த பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவனை சந்தித்தேன். அதன் பின் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது.

பள்ளி இறுதியில் படித்த பல நண்பர்களைப் பற்றிய தகவல் கிடையாது, இன்னும் ஏன் கல்லூரியில் உடன் படித்தவர்களில் ஒரு சிலர்தான் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்களை பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.

திடீரென கடந்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பேன், அந்த மறக்க முடியாத நாட்களில் வாழ்ந்த விதமே தனி. சைக்கி்ளில் ஒன்றாகச் செல்வது, கிரிக்கெட் விளையாடியது, கோவில்களில் சுற்றியது, தெருக்களில் விளையாடியது, போன்றவை இன்னும் நெ்ஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தலைமுறை நண்பர்களைப் பார்த்தால் பொறாமைதான் வருகிறது. இந்த ஈமெயில், கைபேசி எல்லாம் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்திருக்கக் கூடாதா என்று ?

இவை வந்த பின்னும் நண்பர்களைப் பிரிந்திருந்தால், அது நட்பே கிடையாது.